Published : 05 Oct 2020 03:10 PM
Last Updated : 05 Oct 2020 03:10 PM

புறநகர் ரயில் சேவை  6 மாதத்துக்குப் பின் தொடங்கியது: அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

சென்னை

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்துச் சேவைகளும் முடங்கின. இதில் பொதுப் போக்குவரத்தும் ஒன்று. செப்டம்பரில் பொதுப் போக்குவரத்து, பேருந்து, மெட்ரோ ரயில் சேவை அனுமதிக்கப்பட்டாலும் புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

6 மாதத்துக்குப் பின் புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையும், அதுபோல சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை வரையும் புறநகர் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மற்றும் கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை புறநகர் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு தளர்வு காரணமாக அக்.05 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதாக கடந்த வாரம் தெற்கு ரயில்வே முடிவெடுத்து அறிவித்தது. தமிழக அரசுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கான பயணத்துக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

அதன்படி புறநகர் ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்காக 16 சேவைகள் இன்று தொடக்கம். காலை 7.15 முதல் 9.30 வரை, மாலை 4.15 முதல் இரவு 08.30 வரை இயக்கப்படுகிறது. புறநகர் ரயிலில் பயணம் செய்ய தெற்கு ரயில்வே மூலம் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

அத்தியாவசியப் பணியாளர்கள் என்று அறிவித்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறித்த விமர்சனம் எழுந்துள்ளது. அத்தியாவசியப் பணிகளில் செய்தித்துறையும் ஒன்று என்று கூறப்படும் நிலையில், செய்தியாளர்கள் சேர்க்கப்படவில்லை.

பயணிகள் பயணிக்கும் நடைமுறை

* புறநகர் ரயிலில் பயணம் செய்ய தமிழக அரசில் பணிபுரியும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு ரயிலாக இது இயங்கும். பயணம் செய்ய வரும் அத்தியாவசியப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தொடர்பு அலுவலர்கள் அளிக்கும் அவர்களின் முழு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.

* அரசு அளித்த அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். அவர்கள் யார், எந்தத் துறை, பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அனுமதி அட்டையாக அது இருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு இடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். முதல் வகை பரிசோதனை ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ரயில் நிலைய வாயிலில் அடையாள அட்டையைச் சோதித்து அனுமதிப்பார்கள்.

* இரண்டாவது பரிசோதனை ரயில்வே பிளாட்பாரத்தில் டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும். உள்ளே வரும் பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

* ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* பயணிகளின் உடல் பரிசோதனை உடல் வெப்ப பரிசோதனையும் நுழையும்பொழுதே பரிசோதிக்கப்படும். ஒரு வழிப்பாதைக்கான டிக்கெட்டுகள் மட்டுமே டிக்கெட் கவுண்ட்டரில் வழங்கப்படும்.

* அத்தியாவசியப் பணிகளுக்கு அந்தப் பணியாளர்கள் அவர்களுடைய அலுவலகம் சம்பந்தப்பட்ட தொடர்பு அதிகாரியிடம் அடையாள அட்டையைப் பெற்று அதைக் காண்பித்து பயணம் செய்யலாம்.

* சீசன் டிக்கெட், பயண டிக்கெட்டை ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

* ஏற்கெனவே சீசன் டிக்கெட் வைத்து இருந்தவர்கள் அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள எஞ்சிய நாட்களுக்கான பயணத்தைத் தொடரலாம். ஒரு நிலையத்தில் ஒரு கவுண்ட்டர் மட்டுமே இயங்கும். இது பீக் அவரில் டிக்கெட் மட்டும் அளிக்கவும் மற்ற நேரங்களில் சீசன் டிக்கெட் வழங்கவும் பயன்படும்.

முக்கியக் குறிப்பு:

* அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்.

* பொதுமக்களுக்கு டிக்கெட் கிடையாது, அனுமதி கிடையாது.

* ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

* ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ், தமிழக அரசின் காவல்துறை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் பயணிகளின் அடையாள அட்டையைச் சோதித்து உள்ளே அனுப்புவார்கள்.

* ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அரசின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* அனைத்துப் பயணிகளும் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்”.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x