Published : 05 Oct 2020 12:28 PM
Last Updated : 05 Oct 2020 12:28 PM

ரூ.58.20 கோடி மதிப்பீட்டில் மாவட்டம் முழுவதும் உயர் கல்வித்துறை கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டிடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள், துணைவேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டை அறிவுசார் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கிலும், கிராமப்புற மாணவ மாணவிகள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையிலும், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடிச் செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 66 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், மொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 விகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டிடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள், துணைவேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோயம்புத்தூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடம்; சேலம் மாவட்டம், எடப்பாடி- பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 97 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள், சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகவியல் துறையில் முதுநிலைப் பாடப் பிரிவுக்கான வெல்டிங் தொகுதிக் கட்டிடம், கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறைகள், தேர்வு அறை, கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள்; சேலம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டிடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், கூட்டரங்கம் மற்றும் கழிவறைகள், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை - தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டிடங்கள்; திருநெல்வேலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

திசையன்விளை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டிடங்கள்; பனகுடி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டிடங்கள், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 நபர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், வேலூர் மாவட்டம், மாதனூர்- புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள்; குடியாத்தம் - அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டம், அக்ரஹாரம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடம், மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடம், சுற்றுச்சுவர் மற்றும் இதர கட்டிடங்கள், என மொத்தம் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித் துறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் /கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) விவேகானந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x