

திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பப்பாளி மரங்கள், அதிக விளைச்சலைத் தந்த போதும் போதிய விலையின்றி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், வெள்ளோடு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் பரவலாக பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. அதிகளவில் ரெட்லேடி வகை பப்பாளியை விவசாயிகள் சாகுபடி செய்துள் ளனர். இந்த ஆண்டு பப்பாளி மரங்களில் அமோக விளைச்சல் கண்டுள்ளது.
பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நிலத்துக்கே வந்து பப்பாளி பழங்களைக் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை.
அதிக விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் இழப்பைச் சந்திக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ பப்பாளி ரூ.22 முதல் 28 வரை வழக்கமாக இந்த சீசனில் விற்பனையாகும்.
ஆனால், தற்போது கிலோ ரூ.5 முதல் ரூ.7-க்கு விலை போகிறது. வேறுவழியின்றி குறைந்தவிலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை உற்பத்திச் செலவுக்கே கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரி விக்கின்றனர்.