Published : 04 Oct 2020 07:09 AM
Last Updated : 04 Oct 2020 07:09 AM
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. எனவே, அன்றைய தினம் வீடு மற்றும் கோயில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.
இதன்படி, புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்தினருடன் வரத் தொடங்கினர்.
காலை 6 மணி முதல் முகக் கவசம் அணிந்து வந்த பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கனைப் பெற்றுக் கொண்ட பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் இணையதளத்தில் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வந்தனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னை முழுவதும் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT