Published : 03 Oct 2020 05:53 PM
Last Updated : 03 Oct 2020 05:53 PM

தமிழக சுற்றுலா தலங்கள் ரூ.3,496 கோடியில் மேம்பாடு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல் 

மதுரை

தமிழக சுற்றுலா தலங்களை மேம்படுத்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.3,496 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டு வரும் விற்பனை அங்காடியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீனாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புது மண்டபத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் புதினங்களை பாதுகாக்கும் வகையில் கடைகளை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றி அமைப்பதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை வரலாற்று சின்னங்களை மட்டும் பாதுகாக்க ரூ.28 கோடி மதிப்பீட்டில் செலவிடப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.977 கோடி மதிப்பீட்டில் 8 பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பணியாக புதுமண்டபத்தில் உள்ள டெய்லரிங் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றுவதற்காக ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு மூன்று தளங்களாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திற்கும் கடைகள் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 190 கடைகளும், 90 டெய்லரிங் கடைகளும் அமைக்கப்பட உள்ளன.

குன்னத்தூர் சத்திர நிர்வாகத்தினரின் அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தற்போது 95% பணிகள் முடிவடைந்துள்ளது. டிசம்பர் 2020-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதிமுக அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3,496 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளன.

மதுரை மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 1.30 கோடி உள்நாட்டு பயணிகளும், 3 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். உள்நாட்டு பயணிகள் வருவதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது.

வெளிநாட்டுப் பயணிகள் வருகையின்மூலம் அந்திய செலாவணி கிடைக்கிறது. மதுரை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் என்பதால் அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா காலத்தில் வெளியூர் பணியாளர்கள் சென்ற காரணத்தினால் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதனை சரிசெய்து வெளியூர் பணியாளர்கள் தங்கி பணி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகின்ற மார்ச் 2021 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குன்னத்தூர் சத்திரத்தில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த முடியாத காரணத்தினால் அருகில் உள்ள பல்லடுக்கு வாகன காப்பகத்தில் போதுமான இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து செலுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x