பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு தொடங்கியது: தமிழகம் முழுவதும் ஒரு மாதம் நடைபெறும்

Actress Yashika Aannand Latest Clicks
Actress Yashika Aannand Latest Clicks
Updated on
1 min read

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ஆய்வு பணிகளை நடத்த போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. தற்போது, பள்ளிகளில் தேர்வு முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் பாதுகாப்பா னவையாக இருக்கிறதா, அரசு அறிவித்திருந்த பெற்றோர் ஆசிரியர் அடங்கிய கமிட்டிகள் முழுமையாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த போக்குவரத்து ஆணையரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 33 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆய்வு தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 36,389 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங்களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் முழுமையாக ஆய்வு நடத்தப்படும்.

வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதற்காக 33 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் 2 வாகன ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வு நடத்தும் தேதி விபரங்களை சம்பந்தப்பட்ட ஆர்டிஓக்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்த ஆய்வின் போது, போக்குவரத்து துறையுடன் கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள்.

தற்போது சென்னையில் உள்ள பள்ளி வாகனங்களில் சோதனைகள் தொடங்கியுள்ளன. இதுவரை 30 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் முழு ஆய்வு நடத்தப்படும். ஆய்வின் போது, வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் தகுதி சான்று (எப்.சி) அளிக்கப்படமாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in