Published : 03 Oct 2020 12:49 PM
Last Updated : 03 Oct 2020 12:49 PM

பெரும்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு; புதிய காவல் நிலையம் அமைக்க முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை

சென்னை கண்ணகி நகரை அடுத்த பெரும்பாக்கத்தில் பலர் போதைப்பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்டுக் கைதாவது குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய காவல் நிலையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த பலர், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? அப்பகுதிக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி பதிலளிக்க, தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐ.ஜி. பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 10 ஆண்டுகளில், கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த 170 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் ரவுடி கும்பல்கள், கூலிப்படையினர் இல்லை எனவும், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கத் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதிகள், பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை அமைக்க செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 1 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x