Published : 08 Sep 2015 05:01 PM
Last Updated : 08 Sep 2015 05:01 PM

காவிரி பிரச்சினை: கர்நாடக முதல்வருக்கு வாசன் கண்டனம்

காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் நியாயமற்ற முறையில் பேசி வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியிலிருந்து 94 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், உபரி நீரை மட்டுமே கர்நாடகம் அவ்வப்போது திறந்து விடுகிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு 67 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என நியாயமற்ற முறையில் கர்நாடக முதல்வர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது விவசாயிகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான செயலாகும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இனியும் மவுனம் சாதிக்காமல் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு கண்டிப்போடு வலியுறுத்த வேண்டும்'' என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x