Published : 14 Sep 2015 12:50 PM
Last Updated : 14 Sep 2015 12:50 PM

தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி: பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

அரசுப் பள்ளிகளில் முதல்பருவத் தேர்வு தொடங்கும் நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்க திட்டமிட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை, வரும் 19-ம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் கட்ட பயிற்சி முடிந்துவிட்டது.

இன்று (செப்.14) முதல் 2-ம் கட்ட பயிற்சி தொடங்க உள்ளது. வரும் 15, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 15-ம் தேதி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு சமயத்தில், பயிற்சி வழங்கப்படுவதால், பள்ளியை ஒன்றிரண்டு ஆசிரியர்களைக் கொண்டு, நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் 'தி இந்து'விடம் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி, காலை, மாலை என தற்போதுதான் நடந்து முடிந்தது.

இந்நிலையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆண்டுக்கு, 20 நாள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. இதை அவசர அவசரமாக, தேர்வு நேரத்தில் தர வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை.

தனித்தனியே பயிற்சி நடக்கும் போது, பள்ளியிலிருந்து, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே குறைவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக பயிற்சியளித்தால், பள்ளியை ஒன்றி ரண்டு ஆசிரியர்களை வைத்து நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். ஆகவே, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதனை வன்மையாக கண்டிக்கிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x