

அக்.05 முதல் சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இது அத்தியாவசிய பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மார்ச் 24 ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடங்கியது. இதில் பொதுபோக்குவரத்தும் ஒன்று பின்னர் செப்டம்பரில் தளர்வுகள் அதிகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுப்போக்குவரத்து, பேருந்து, மெட்ரோ ரயில் சேவை அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.
தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையும், அதுபோல சென்ட்ரலில் இருந்து சூளுர்பேட்டை வரையும் புறநகர் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல கடற்கரை முதல் வேளச்சேரி வரைபறக்கும் ரயில் சேவை மற்றும் கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை புறநகர் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக அக்.05 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. தமிழக அரசுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கான பயணத்துக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்ய தமிழக அரசில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு அவர்களுக்கான சிறப்பு ரயிலாக இது இயங்கும். பயணம் செய்ய வரும் அத்தியாவசிய பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தொடர்பு அலுவலர்கள் அளிக்கும் அவர்களின் முழு விபரங்கள் அடங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
அரசு அளித்த ஒரிஜினல் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். அவர்கள் யார் எந்த துறை பெயர் உள்ளிட்ட விவரங்கள் கூடிய அனுமதி அட்டையாக அது இருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு இரண்டு இடங்களில் பரிசோதனைகள் செய்யப்படும். முதல் வகை பரிசோதனை ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுக்காப்புப் படை போலீஸார் ரயில் நிலைய வாயிலில் அடையாள அட்டையை சோதித்து அனுமதிப்பார்கள்.
இரண்டாவது பரிசோதனை ரயில்வே பிளாட்பாரத்தில் டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும். உள்ளே வரும் பயணிகளுக்கு சானிடைசர் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பயணிகளின் உடல் பரிசோதனை உடல் வெப்ப பரிசோதனையும் நுழையும் பொழுதே பரிசோதிக்கப்படும். ஒரு வழிப்பாதைக்கான டிக்கெட்டுகள் மட்டுமே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படும்.
அத்தியாவசிய பணிகளுக்கு அந்த பணியாளர்கள் அவர்களுடைய அலுவலகம் சம்பந்தப்பட்ட தொடர்பு அதிகாரியிடம் அடையாள அட்டையைப் பெற்று அதை காட்டி காண்பித்து பயணம் செய்யலாம்.
சீசன் டிக்கெட், பயண டிக்கெட்டை ஸ்டேஷனில் உள்ள டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
ஏற்கெனவே சீசன் டிக்கெட் வைத்து இருந்தவர்கள் அந்த சீசன் டிக்கெட்டில் உள்ள எஞ்சிய நாட்களுக்கான பயணத்தை தொடரலாம். ஒரு நிலையத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே இயங்கும் இது பீக் அவரில் டிக்கெட் மட்டும் அளிக்கவும் மற்ற நேரங்களில் சீசன் டிக்கெட் வழங்கவும் பயன்படும்.
முக்கிய குறிப்பு:
* அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்படும்.
* பொதுமக்களுக்கு டிக்கெட் கிடையாது, அனுமதி கிடையாது.
* ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
* ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ், தமிழக அரசின் காவல்துறை ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் பயணிகளின் அடையாள அட்டையை சோதித்து உள்ளே அனுப்புவார்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அரசின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* அனைத்து பயணிகளும் முககவசம், சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்”.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.