Published : 02 Oct 2020 12:15 PM
Last Updated : 02 Oct 2020 12:15 PM

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயல்படுங்கள்: முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை

முதல்வர் உண்மை நிலையை மூடி மறைத்துத் தகவல்களை வெளியிடுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பலிகொடுத்துவிடுவது போல ஆகிவிடும், எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண்ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் தமிழ்நாட்டிற்கு 137 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. 2007 பிப்ரவரி 5இல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய போது, இதே காலகட்டத்தில் கர்நாடகம் 134 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து, 2018 பிப்ரவரியில் அளித்தத் தீர்ப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் 123.14 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று மேலும் குறைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு, சுமார் 3 டி.எம்.சி. குறைவாக 120.24 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்து இருக்கிறது என்பதை இந்து ஆங்கில நாளேடு (அக்.02) சுட்டிக் காட்டி இருக்கிறது.

கடந்த செப். 3-ம் தேதி தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நாளேடுகளில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களுக்கு திறந்துவிட வேண்டிய நீர் 86.38 டி.எம்.சி. என்றும், ஆனால் கர்நாடகம் 75.048 டி.எம்.சி. மட்டுமே திறந்துவிட்டது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த ஆக.27-ம் தேதி திருவாரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், உச்சநீதிமன்றம் வரையறுத்த அளவுப்படி கர்நாடகம் மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கேட்டு வருகிறோம். கர்நாடகமும் அதைத் தந்து வருகிறது” என்று தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்தது. முதல்வரின் கருத்து தமிழகத்திற்குப் பாதகத்தையே ஏற்படுத்தும்.

மத்திய அரசு பெயரளவுக்கு அமைத்த காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ்வப்போது “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்” என்று கர்நாடகத்திற்கு உத்தரவு போடுவதும், அதனை கர்நாடக அரசு அலட்சியப் படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதல்வர் உண்மை நிலையை மூடி மறைத்துத் தகவல்களை வெளியிடுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பலிகொடுத்துவிடுவது போல ஆகிவிடும்.

எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண்ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x