Last Updated : 02 Oct, 2020 10:48 AM

 

Published : 02 Oct 2020 10:48 AM
Last Updated : 02 Oct 2020 10:48 AM

13 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவடையும் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள்: கழிவுநீர் குழாயில் வெள்ளோட்டம் தொடக்கம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் ஒருவழியாக முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களில் வெள்ளோட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி உதயமானது. ஆனால், தூத்துக்குடி நகரில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் நகராட்சியாக இருந்த போதே, அதாவது 2007-ம்ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்ரூ.95 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணிகளில் பல்வேறு சிக்கல் காரணமாக தொய்வு ஏற்பட்டது.

பூகோள ரீதியாக தூத்துக்குடி நகரில்சிறிதளவு பள்ளம் தோண்டினாலே தண்ணீர் ஊற்றெடுக்கும். மேலும்மழைக் காலங்களில் பல மாதங்கள் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும். இதுபோன்ற காரணிகள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தின. இதனால் பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டு, ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டே சென்றது. இதனால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர்.

13 ஆண்டுகள்

இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி நகரில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் வெள்ளோட்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 1980-ல் தொடங்கிய பழைய பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில் மாநகரின் முக்கியப் பகுதிகளை இந்த திட்டத்தில் இணைக்கும் வகையில் 2007-ம் ஆண்டு புதிய பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. 13 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்றன.

ரூ.12 கோடி ஒதுக்கீடு

இந்த திட்டத்தில் மொத்தம் 112.35 கி.மீ. தொலைவுக்கு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், 4,149 இடங்களில் திறப்புகள் (மேன்ஹோல்) அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள மருந்து குடோனுக்கு பின்புறம் துணை பம்பிங் நிலையமும், கரிகளம் காலனி பகுதியில் பிரதான பம்பிங் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள 30 வார்டுகள் இந்த திட்டத்தால் பயன் பெறும். மொத்தம் 25 ஆயிரம் வீட்டு இணைப்புகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் குழாய்களில் இருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க மாநகராட்சி சார்பில் ரூ.12 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது பாதாளச் சாக்கடை குழாய் திறப்புகளை திறந்து சுத்தம் செய்தல், கழிவுநீர் குழாய்களில் வெள்ளோட்டம் பார்த்தல் ஆகிய சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பிரதான பம்பிங் நிலையத்தில் இறுதிக்கட்ட பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத (அக்டோபர்) இறுதிக்குள் முடிவடைந்து, பாதாள சாக்கடை திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

13 மண்டலங்களில் இருந்து கழிவுநீர் துணை பம்பிங் நிலையத்துக்கு வந்து சேரும். அங்கிருந்து பம்பிங் செய்யப்பட்டு பிரதான பம்பிங் நிலையம் செல்லும் கழிவுநீர் மீண்டும் பம்பிங் செய்யப்பட்டு தருவைகுளத்தில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு குளத்தை சென்றடையும். அங்கு கழிவுநீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.

சுத்திகரிப்பு நிலையம்

தருவைகுளத்தில் மாநகராட்சி சார்பில் தனியாக 28 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ரூ.35.84 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை பயன்படுத்தும் வகையில் தருவைகுளம் குப்பைக் கிடங்கு பகுதியில் ‘பல்லுயிர் பூங்கா’ அமைக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பல ஆண்டுகளாக சேர்ந்துள்ள குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் அழித்து இந்தப் பகுதியை சுத்தப்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

மேலும், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை கூடுதலாக 10 வார்டு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.143.22 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இதுபோல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் ரூ.600 கோடியில் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் ஒட்டு மொத்தமாக மாநகராட்சிப் பகுதி முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x