Published : 02 Oct 2020 07:03 AM
Last Updated : 02 Oct 2020 07:03 AM

கரோனா நோயாளிகளுக்கு கை கொடுக்காத மருத்துவ காப்பீடு: பிரத்யேக கரோனா காப்பீடுகளை அறிமுகப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள்

தனியார் மருத்துவமனைகளின் கட்டண வசூலிப்பு முறையில் உள்ள சிக்கல்களால், கரோனா பாதித்தவர்களுக்கு அவர்களுடைய மருத்துவ காப்பீடுகள் கைகொடுப்பதில்லை. இந்நிலையில் பிரத்யேககரோனா காப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும்போது, சிகிச்சைக்கான மருந்து கட்டணத்தை விட, சுய பாதுகாப்பு கவச உடை (PPE KIT) கட்டணம் பன்மடங்கு உயர்வாக உள்ளது. நோயாளிகள் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், இந்த பிபிஇ கிட்செலவு காப்பீட்டுக்குள் வருவதில்லை. இதனால் நோயாளிகள் தங்கள் கையில் உள்ள பணத்தை கூடுதலாக தரவேண்டியுள்ளது.பிபிஇ கிட்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலுத்துமாறுசில மருத்துவமனை நிர்வாகங்கள்கேட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிஇ கிட் மூலம் பணம் ஈட்டும்நோக்கில் சில தனியார் மருத்துவமனைகளில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நோயாளிகளை அனுமதிக்கும்போது, அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக கூறி, அவர்களை கரோனா வார்டில் அனுமதித்து பிபிஇ கிட் கட்டணத்தை சேர்த்து அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ரூ.2 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு செய்த நபர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, பொது வார்டு, ஐசியூ பிரிவில் நாளொன்றுக்கு முறையே ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மட்டுமேபெற முடியும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அறை கட்டணம் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கின்றன. காப்பீட்டில் வழங்கும் தொகை போக மீதத்தை நாம் செலுத்த வேண்டும். அதனால் பொதுமக்கள் பெற்றுள்ள மருத்துவ காப்பீடுகள் கரோனா சிகிச்சைக்கு கைகொடுப்பதில்லை.

இந்நிலையில், பிரத்யேக கரோனா காப்பீடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளன. இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கரோனா காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்களிலேயே பொதுத்துறை நிறுவனமான தி ஓரியண்டல் இன்சூரன்ஸ்நிறுவனம்தான் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குவதாக முகவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் எஸ்.சந்தான கிருஷ்ணன் கூறியதாவது:

இந்நிறுவனம் சார்பில் கரோனாகவச், கரோனா ரக்சக் ஆகிய 2 காப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா கவச் காப்பீட்டை 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட தனி நபர், அவர் சார்ந்த குடும்பத்தினர் பெறலாம். மூன்றரை, ஆறரை,ஒன்பதரை மாதங்கள் என 3 வகையான கால அளவில் காப்பீடுகள் உள்ளன. கரோனா தொற்றால் ஏற்படும் மருத்துவ செலவை மட்டுமேஇதில் பெற முடியும்.

குறிப்பாக பிபிஇ கிட் செலவை காப்பீட்டில் பெற முடியும். சிகிச்சைசார்ந்த உச்சவரம்பு இல்லை. காப்பீட்டுத்தொகை உச்சவரம்பு மட்டுமே உள்ளது. குறைந்தபட்சம் 24 மணி நேரம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கட்டாயம். ரூ.50 ஆயிரம் முதல் அதன் மடங்காக5 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

கரோனா ரக்சக் காப்பீட்டை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறலாம். ரூ.50 ஆயிரம் முதல் அதன் மடங்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு செய்யலாம். கரோனாவால் பாதிக்கப்பட்டு 72 மணி நேரம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறுபவர்கள், காப்பீட்டுத்தொகையை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு https://orientalinsurance.org.in இணையத்தில் பார்க்கலாம். 1800118485 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களை தமிழில் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யலாம்.

https://s.docworkspace.com/d/AH4JZcuxuoEu4Zr7y9-dFA

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x