Published : 01 Oct 2020 09:32 PM
Last Updated : 01 Oct 2020 09:32 PM

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் : சுகாதாரத்துறைச் செயலர் அறிவுறுத்தல்

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி தற்பொழுது ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவை மற்றும் பணி நிமித்தமாக வெளியே வருகின்றனர்.

அவ்வாறு பொதுமக்கள் வெளியே வரும் பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பல்வேறு செய்திகள் IEC செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவது குறித்து எடுத்துரைத்து அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இதுகுறித்து வணிக வளாகங்களில் இருந்த பொதுமக்களிடம் வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிவதுடன் அதை சரியான முறையில் அணிய வேண்டும்.

வாய் மூக்கு ஆகிய பகுதிகளை முழுமையாக மூடும் வண்ணம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, காய்கறி சந்தை, வழிபாட்டுத்தலங்கள், பல்பொருள் அங்காடி, மற்றும் துணிக்கடைகள் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிவதுடன் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் முக கவசத்தை தவறாக தாடைப் பகுதியிலும் அல்லது மூக்கிற்கு கீழே அணியக் கூடாது.

முக கவசத்தின் முன்பகுதியை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்த்து கட்டாயம் பின்புறத்தின் வழியாக மட்டுமே அகற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் குப்பைகளுடன் கலந்து முகக்கவசத்தை அப்புறப்படுத்த கூடாது எனவும், துணியால் ஆன முக கவசத்தை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்கு பிறகு நன்றாக துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். முக கவசம் அகற்றப்பட்ட உடன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன்படி ரூபாய் 200 அபராதமும் பொது இடங்களில் துப்பினால் ரூபாய் 500 அபராதமும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று என்ற நிலையில் அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என பொதுமக்களிடம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x