சிவகங்கைக்கு பெரியாறு நீர் திறக்காததால் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு

சிவகங்கைக்கு பெரியாறு நீர் திறக்காததால் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசனநீர் திறக்காததால் அக்.3-ம் தேதி மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகே சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக திறந்ததால் பல கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாட்கள் திறக்கப்படும் பாசனநீர் மூலம் மதுரை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

வைகை அணையில் திறக்கப்பட்ட பெரியாறு பாசனநீர் மேலூர் குறிச்சி கண்மாயை வந்தடைந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கவில்லை. இதையடுத்து அக்.3-ம் தேதி மதுரை பொதுப்பணித்துறை வைகை-பெரியாறு பாசன தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சிவகங்கை மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தேவர் கூறியதாவது: மேலூர் பகுதிக்கு திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஏற்கனவே சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்தோம். ஆனால் வழக்கம்போல் திறக்கவில்லை.

மேலும் ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் விதிமுறையை மீறி விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்கின்றனர். அதிகாரிகள் தண்ணீரை விலைக்கு விற்பதால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஒருபோகத்திற்கே கையேந்தும் நிலை உள்ளது. இதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in