Published : 01 Oct 2020 03:48 PM
Last Updated : 01 Oct 2020 03:48 PM

ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை; பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தி உரிய தண்டனையை பெற்றுத் தருக: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தலித் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 1) வெளியிட்ட அறிக்கை:

"உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். உயிருக்குப் போராடிய அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் உயிருக்குப் போராடி செவ்வாய்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடிய சம்பவம் கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கை செய்யக்கூட அவரது குடும்பத்தினருக்குக் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இறந்த பெண்ணின் உடலை டெல்லி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உத்தரப்பிரதேச காவல் துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச்சென்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் அவரது கிராமத்தில் தகனம் செய்துள்ளனர்.

பலவந்தமாக தனது மகள் தகனம் செய்யப்படுவதை தடுக்க முயன்ற தந்தையின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இரவில் உடலை எரிக்கும் பழக்கம் இல்லை என்றும், பாரம்பரிய வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து காலையில் தகனம் செய்யலாம் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் வலியுறுத்தியும் அதை பொருட்படுத்தாமல் பெண்ணின் உடலை தகனம் செய்துள்ளனர். பெண்ணின் உடலை காவல் துறையினர் தகனம் செய்வதற்கு கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆம்புலன்ஸ் முன் படுத்து மறியல் செய்துள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு பெண்ணின் உடலை உத்தரப்பிரதேச காவல் துறையினர் தகனம் செய்துள்ளனர். இதைவிட ஒரு அப்பட்டமான மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல் வேறு எதுவும் இருக்க முடியாது.

சமீபத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் நடந்த குற்ற நிகழ்வுகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தலித்துகள் மீதான குற்றங்கள் 7 சதவீதமும், பழங்குடி மக்கள் மீதான குற்றங்கள் 26 சதவீதமும், 2018 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிராக 45 ஆயிரத்து 935 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 11 ஆயிரத்து 829 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களை விட தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. அதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 5,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018 ஆம் ஆண்டை விட 7.3 சதவீதம் அதிகமாகும்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பட்டியலின, பழங்குடியின மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை தேசிய குற்ற ஆவண காப்பகமே ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் நிகழ்வதில் உத்தப்ரபிரதேச மாநிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலித் விரோத போக்குதான் காரணமாகும்.

தற்போது நடந்துள்ள கொடூரமான பாலியல் வன்கொடுமையும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இப்படுகொலை குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொடிய வன்முறைக்கு இலக்காகி இறந்த பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x