Published : 01 Oct 2020 02:43 PM
Last Updated : 01 Oct 2020 02:43 PM

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

திண்டுக்கல் ஐ.லியோனி - சபாபதி மோகன்: கோப்புப்படம்

சென்னை

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஆ.ராசா, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அமமுகவில் இருந்து விலகி, கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் மாதம் திமுகவில் இணைந்த தங்க. தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக். 1)அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் புதிய கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக, பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி., துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்குப் பதிலாக, கொள்கைப் பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.யுடன், திமுக சட்டதிட்ட விதி: 18, 19-ன்படி, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனி புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், மேடைப் பேச்சாளர் ஆவார். சபாபதி மோகன், மனோன்மணியம் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x