Published : 01 Oct 2020 01:10 PM
Last Updated : 01 Oct 2020 01:10 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள காங்கிரஸ் உறுப்பினரைத் தொடர்ந்து திமுக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு, குடியரசுத் தலைவர் சட்ட ஒப்புதல் வழங்கி இருந்தார். நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிராகக் கடுமையான வாதங்களை வைத்தன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை நிலவி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடந்தது.
இந்நிலையில் வேளாண் சட்டங்குகளுக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாபன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது திமுகவும் வேளாண் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வேளாண் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமாக உள்ளன. இது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் அவர்களுக்கு ஏதுவாக விற்பனை செய்யக்கூடிய திறனைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளன. விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தச் சட்டங்கள் செல்லாது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!