சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: காவலர்களுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: காவலர்களுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலர்கள் 3 பேருக்கும் மீண்டும் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றக் கிளை மறுத்துள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில், சிபிஐ போலீஸார் விசாரணையை முடித்துவிட்டனர். போதுமான தடயங்களையும் சேகரித்துவிட்டனர். இதனால் ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கமாட்டோம். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, இரட்டை கொலை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இதையடுத்து, சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கெனவே ஒரு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in