Published : 01 Oct 2020 11:55 AM
Last Updated : 01 Oct 2020 11:55 AM

புத்துயிர் பெறுமா வடபழஞ்சி ஐ.டி. பூங்கா? - தொழில் நிறுவனங்களை ஈர்க்காததால் கரோனா மையமான அவலம்

மதுரை அருகே வடபழஞ்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, பெரிய நிறுவனங்களை ஈர்க்காததால் கரோனா சிகிச்சை மையமாகி உள்ளது. மதுரையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஈர்க்க இலந்தைகுளம் மற்றும் வடபழஞ்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதில், இலந்தைகுளம் பூங்கா சில நிறுவனங்களோடு பெயரளவுக்காவது செயல் படுகிறது. ஆனால், காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரே 240 ஏக்கரில் அமைக்கப் பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பப்பூங்காவில் இதுவரை ஒரு நிறுவனம் கூட தொழில் தொடங்கவில்லை.இந்த இடம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கன்சோ ட்ரீ அமைப்பின் நிர்வாக இயக்குநரும், தொழில் முனைவோருமான ஆர்.கே. ஜெயபாலன் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த மாவட்டங் களாக கிளாஸ் ‘ஏ’யில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களும், வளரும் மாவட்டங்களாக கிளாஸ் ‘பி’யில் கோவை, திருப்பூர் கரூர் போன்ற மாவட்டங்களும், பின்தங்கிய மாவட்டங்களாக கிளாஸ் ‘சி’யில் மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களும் இடம்பெற்றுள் ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த, வளரும் மாவட்டங்களில் தொழில் தொடங்குவோருக்குப் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும், பின்தங்கிய மாவட்டங்களில் 100 சதவீதம் வரை பதிவுக் கட்டணத்தில் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. இதுதவிர நீண்டகாலக் கடன்களுக்கு வட்டி மானியம், அறிவுசார் சொத்துரிமை பதிவு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அனைத்துப் பெரிய நிறுவனங்களும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையே மையம் கொண் டுள்ளன. மிகவும் சிறிய நிறுவனங்கள் மட்டும் மதுரை யில் செயல்படுகின்றன. வட பழஞ்சியில் சில நிறுவனங் கள் இடம் வாங்கி உள்ளன. ஆனால், அவர்களும் தொழில் தொடங்குவதாகத் தெரியவில்லை. ரியல் எஸ்டேட் மனப்பான்மையோடு இடத்தைக் கைமாற்றிவிடும் மனநிலையிலேயே அவர்களும் உள்ளனர் என்று கூறினார்.

இதுகுறித்து எல்காட் அதிகாரிகள் கூறியதாவது: வடபழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் 4 பெரிய நிறுவனங்கள் வருகின்றன. அவை, கடந்த மார்ச்சிலேயே தொழில் தொடங்குவதாக இருந்தது. கரோனா பரவலால் தற்காலிகமாக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் ஒப்படைத்த பிறகு தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்படத் தொடங்கிவிடும். இதுதவிர மற்ற தொழில்கள் தொடங்கவும் வடபழஞ்சியில் இடம் வாங்கி உள்ளனர். அவர்களும் கட்டிடம் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x