Published : 11 Sep 2015 08:09 AM
Last Updated : 11 Sep 2015 08:09 AM

முதலீட்டாளர் மாநாட்டால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் குவிந்தனர். முதல் வரை வரவேற்கும் வகையில், சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட் டிருந்தன. மேலும் வழியெங்கும் மேள தாளம், நாதஸ்வரம் வாசிப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

முதல்வர் மாநாட்டுக்கு வரும்போதும், மாநாட்டை முடித்து விட்டு செல்லும்போதும் கத்திப்பாரா அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

மேலும் போரூரில் இருந்து நந்தம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வடபழனி வழியாக திருப்பிவிடப்பட்டன. இதேபோல், கிண்டியில் இருந்து நந்தம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய கனரக வாகனங்களும் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால், அடையாறு முதல் நந்தம்பாக்கம் வரையிலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கிண்டி கத்திப்பாராவில் இருந்து நந்தம்பாக்கம் வரையில் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சாலைகளில் இருபுறமும் தடுப்புகளை போட்டுள்ளனர். இதனால், நாங்கள் சாலை களை கடக்க நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் மாநகர பேருந்துகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x