Last Updated : 30 Sep, 2020 08:06 PM

 

Published : 30 Sep 2020 08:06 PM
Last Updated : 30 Sep 2020 08:06 PM

சோலார் பம்புசெட் திட்டத்தில் ஒதுக்கீடு வராததால் விவசாயிகள் அதிருப்தி

சிவகங்கை

தமிழகத்தில் சோலார் பம்புசெட் திட்டத்தில் ஒதுக்கீடு வராததாலும், மானியத்தை குறைத்ததாலும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானியத்தில் சோலார் பம்புசெட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 5 ஹெச்.பி மோட்டார், 7.5 ஹெச்.பி மோட்டாருடன் சோலார் பேனல் அமைத்துத் தரப்படும். மேலும் இத்திட்டத்தில் கடந்த ஆண்டு வரை 90 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இதில் மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் மானியம் வழங்கியது. மேலும் இத்திட்டத்தில் பயனடைவோர் இலவச மின்சார திட்டத்தில் பதிவுமூப்பை துறக்க வேண்டும். இதற்காக கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. விவசாயிகள் 10 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும். இதனால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் 2019-20-ம் ஆண்டிற்கு 4 ஆயிரம் சோலார் பம்புசெட்டுகள், 2020-21-ம் ஆண்டிற்கு 13,500 சோலார் பம்புசெட்டுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதிய நடைமுறைப்படி இலவச மின்சார திட்டத்தில் பதிவுமூப்பை துறக்கத் தேவையில்லை. ஆனால் அதற்கான மானியம் 20 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பங்குத் தொகையாக 30 சதவீதம் செலுத்த வேண்டும்.

மேலும் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், இதுவரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இதையடுத்து விண்ணப்பித்தவர்களுக்கு சோலார் பம்புசெட் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் பிரதிநிதி கண்ணன், “இலவச மின்சார திட்டத்தில் 2000-ம் ஆண்டு பதிவு செய்தவர்களே இதுவரை இணைப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் இலவச மின்சாரத் திட்டத்தில் பதிவுமூப்பை துறந்தாலும் பரவாயில்லை என சோலார் பம்பு செட் திட்டத்திற்கு மாறி வருகின்றனர்.

தற்போது இலவச மின்சாரத் திட்டத்தை காரணம் காட்டி 20 சதவீத மானியம் ரத்து செய்தது விவசாயிகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் 6 மாதங்கள் கடந்தநிலையில் இதுவரை சோலார் பம்புசெட் அமைக்க நிதி ஒதுக்கீடு வரவில்லை. இதனால் பலர் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்” என்று கூறினார்.

இதுகுறித்து வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் இளங்கோவன் கூறுகையில், ‘‘விரைவில் ஒதுக்கீடு வந்துவிடும். வந்ததும் விண்ணப்பத்தவர்களுக்கு வழங்கப்படும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x