Published : 30 Sep 2020 05:57 PM
Last Updated : 30 Sep 2020 05:57 PM

‘சக்ரா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட விதிக்கப்பட்ட  தடை உத்தரவு: மேலும் நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

'சக்ரா' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

'சக்ரா' திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதே நிலை தொடரும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8.29 கோடியைத் திருப்பித் தருவதாகக் கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தனர். இதேபோல் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்குப் படமெடுக்க ஆனந்தனுக்குத் தடை விதிக்கவும், உத்தரவாதத் தொகையாக 1 கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்குகள் குறித்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் பென்டிரைவில் டிரெய்லரைத் தாக்கல் செய்தார். அதை நீதிபதி கணினியில் போட்டுப் பார்த்தார்.

படத்தின் விற்பனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இறுதி செய்யப்படவில்லை என்றும் விஷால் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக தான் நடித்த 'ஆக்‌ஷன்' திரைப்படம் போதிய லாபம் ஈட்டியுள்ளது. 'சக்ரா' திரைப்படம் தொடர்பாக 'ஆக்‌ஷன்' படத் தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் போடாததால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், 'சக்ரா' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x