Published : 30 Sep 2020 02:41 PM
Last Updated : 30 Sep 2020 02:41 PM

தடையில்லாச் சான்று இல்லாமல் விவசாயப் படிப்புகளை தொடங்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தடையில்லாச் சான்று இல்லாமல் விவசாயப் படிப்புகளைத் தொடங்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் அக். 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விவசாயப் படிப்புகளைத் தொடங்க, தமிழக அரசின் தடையில்லாச் சான்று பெற வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோவையில் உள்ள காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி போதும், தமிழக அரசினுடைய தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு இன்று (செப்.30) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசினுடைய உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே இரண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சார்பில் தனி நீதிபதி முன்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் மேலும், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை உத்தரவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை (அக். 6) ஒத்திவைத்து தனி நீதிபதி முன்பு உள்ள வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்க்குமாறு பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x