Last Updated : 30 Sep, 2020 12:29 PM

 

Published : 30 Sep 2020 12:29 PM
Last Updated : 30 Sep 2020 12:29 PM

நீட் தேர்வு முறைகேடு: சாதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை வழங்கக் கோரி மாணவர் வழக்கு- சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர் பவித்ரனின் சாதிச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுத்த தேனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து ஜாமீனில் உள்ளேன்.

இந்த வழக்கு விசாரணையின் போது எனது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்று மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது தேனி நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் 10 மற்றும் 12-ஆம் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டு சாதி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்து எனது சாதி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்”.எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தாரணி முன்பாக இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மாணவரின் மேற்படிப்பிற்காக சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி தேனி சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x