Published : 30 Sep 2020 07:54 AM
Last Updated : 30 Sep 2020 07:54 AM
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது ஊரடங்கு விதியை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் திமுகவின் தோழமைக் கட்சியினரும் திரளாக கலந்துகொண்டனர்.
4 பிரிவுகளில் வழக்கு
இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதிஸ்டாலின் உட்பட சுமார் 140 பேர்மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல், தொற்றுநோயை பரப்பும் வகையில் நடந்து கொள்ளுதல், ஊரடங்கு விதியை மீறுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கே.எஸ்.அழகிரி மீது வழக்கு
கொருக்குப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சிமாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கந்தன் சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட சென்னை முழுவதும் 25 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT