Published : 29 Sep 2020 07:26 PM
Last Updated : 29 Sep 2020 07:26 PM

மதுரை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மகப்பேறு சிகிச்சை தொடக்கம்: 50 சதவீதம் பிரசவம் குறைந்ததால் மாநகராட்சி நடவடிக்கை

மதுரை மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதற்கு மகப்பேறு மருத்துவர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு தினமும் 3,500 முதல் 4 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

அவர்களுக்கு காலை முதல் மதியம் வரை அனைத்து மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். சிக்கலான சிகிச்சைகள், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு நோயாளிகளை அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள்.

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமே தடையில்லாமல் பிரசவங்கள் பார்க்கப்படுகிறது.

இரவு நேரத்தில் பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் செவிலியர்கள், போனில் தகவல் தெரிவித்து மருத்துவர்களை வரவழைத்து பிரசவம் பார்க்கிறார்கள்.

அவர்கள் வர முடியாத பட்சத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இரவு நேரத்தில் மருத்துவர்கள் வருவதற்கு தாமதமாகும்பட்சத்தில் பிரசவத்தில் சில நேரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் எண்ணிக்கை குறைந்தன.

கரோனா ஊரடங்கில் கர்ப்பிணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்து பாதுகாப்பாகப் பிரசவம் பார்ப்பதற்காக முழுக்க அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

அறுவை சிகிச்சை இல்லாத தொற்று நோய் அறிகுறி இல்லாத கர்ப்பிணிகளுக்கு மட்டுமே மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்கப்பட்டது. அதனால், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் மிகப்பெரியளவில் குறைந்தது.

அதனால், தற்போது மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர், அன்சாரி நகர், கே.புதூர் ஆகிய மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர்களை நியமித்து, பிரசவம் பார்ப்பதற்கு மாநகராட்சி சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘‘பொதுவாக மாதந்தோறும் மாநகராட்சி ஆரம்ப சுகாதாரநிலையங்களில் சராசரியாக 20 பிரவசங்கள் வீதம் 400 முதல் 500 பிரசவங்கள் நடந்தது.

தற்போது 50 சதவீதத்திற்கு மேல் குறைந்தது. இதை மீண்டும் உயர்த்த முதற்கட்டமாக 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிரசவத்திற்கு உதவ செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் சிப்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x