Published : 29 Sep 2020 04:18 PM
Last Updated : 29 Sep 2020 04:18 PM

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள்; இடைத்தேர்தல் நடத்தும் சூழல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

சென்னை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயிரிழப்பால் காலியாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில அரசுடனான ஆலோசனைக்குப் பின் இந்த முடிவைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உயிரிழந்தார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததால் திருவொற்றியூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

கே.பி.பி.சாமி உயிரிழந்த மறுநாள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.

குடியாத்தம் தொகுதி அதிமுக உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்தத் தொகுதி காலியானது. 2019 மக்களவைத் தேர்தலுடன் நடந்த இடைத்தேர்தலில் காத்தவராயன் தேர்வு செய்யப்பட்டார். 9 மாதங்கள் எம்எல்ஏவாக இருந்த நிலையில் காத்தவராயன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், குடியாத்தம் தொகுதி மீண்டும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் கரோனா தொற்று ஆரம்பமான நிலையில் இடைத்தேர்தல் 6 மாதத்திற்குள் நடக்கும் என்பது தள்ளிப்போனது. இந்நிலையில் இவ்விரண்டு தொகுதிகள் உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“அசாம் மாநிலத்தில் ரங்கபுரா, சிப்சாகர் தொகுதிகள், கேரளாவில் குட்டநாடு, சாவரா தொகுதிகள், தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 13 பலகாட்டா தொகுதி என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் பல்வேறு காலகட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனை நடத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்கண்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும்''.

இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்து சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடக்க 6 மாத இடைவெளி உள்ள நிலையில், இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவல்லிக்கேணி தொகுதி காலியாக உள்ள நிலையில் அதற்கும் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x