Published : 29 Sep 2020 07:14 AM
Last Updated : 29 Sep 2020 07:14 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் அடையாறு ஆற்றை அகலப்படுத்த 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் ஓடும்அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள பொதுப்பணித் துறையினர், இதற்காக தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கிஉள்ளனர்.

காஞ்சி மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆறு, செங்கைமாவட்டம் வழியாக சென்னை மாவட்டத்தில் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பட்டினப்பாக்கம் வரை சுமார் 42 கி.மீ தூரம் பயணிக்கிறது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடையாற்றை ஒட்டியபகுதிகள் பாதிக்கப்பட்டதுடன் தாம்பரம், ஆதனூர், பெருங்களத்தூர், கவுல்பஜார், திருநீர்மலை, மணப்பாக்கம், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடையாற்றின் கரைகள் கடும் சேதமடைந்தன.

இதையடுத்து அடையாறு ஆற்றைவருவாய் ஆவணங்களில் உள்ளதுபோல் சீரமைக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அடையாறு ஆற்றையொட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.20 கோடி செலவில் ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டது. அதேபோல் சென்னை நதிகள் சீரமைப்புஅறக்கட்டளை நிதியின்கீழ்ரூ.94.76 கோடி செலவில் பொதுப் பணித் துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை 25 கி.மீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டது. அடையாறு ஆற்றில் இணையும் சோமங்கலம், ஒரத்தூர், மணிமங்கலம் போன்ற கிளை ஆறுகளும் சீரமைக்கப்பட்டன.

6 முதல் 60 அடி வரை அகலம்உள்ள அடையாறு ஆறானது பல்வேறுஇடங்களில் அளவு சுருங்கி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர்செல்ல வழியில்லாமால் குடியிருப்புபகுதிகளுக்குள் செல்கிறது. இதனால்அடையாறு ஆற்றை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர் இதற்காக தனியார் பட்டாநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் படப்பை, மணிமங்கலம், தாம்பரம், ஆதனூர் பகுதிகளில் உள்ள37 ஏரிகளின் உபரிநீர் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து விநாடிக்கு 8,000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலக்கிறது.

இந்நிலையில் போதிய கொள்ளளவு இல்லாமல் சுருங்கியுள்ள ஆற்றுப்பகுதிகளை அகலப்படுத்த முடிவுசெய்து, ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை சுமார் 25 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம் எல்லையில் உள்ள அடையாறு ஆற்றுப் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பில் உள்ளதுபோல் 2 மடங்கு இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசின் சிறப்பான திட்டத்தாலும், பொதுப்பணித் துறையினரின் ஒத்துழைப்பாலும் தற்போதுஅடையாறு அகலப்படுத்தும் திட்டத்தை வரவேற்கிறோம்.

மேலும் அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x