

145 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு காய்கறி சந்தை நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே காய்கறிகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர்.
கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ம்தேதி மூடப்பட்டது. வியாபாரிகளின் தொடர் கோரிக்கை காரணமாக 145 நாட்களுக்கு பிறகு நேற்றுசந்தை திறக்கப்பட்டது. மொத்தவிற்பனையில் ஈடுபடும் 197 வியாபாரிகளுக்கு மட்டும் சந்தையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தையில் கரோனா தொற்றை் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்க ஆயிரக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு மலர், காய், கனிவியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறும்போது, ‘‘இன்று 450 லோடு காய்கறிகள் வந்துள்ளன. அரசின் விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிப்பதை உறுதிசெய்ய, சந்தை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.