சிறுவாணி அணை விவகாரம்: தமிழக அரசுக்குக் கோவை ஆட்சியர் கடிதம்

சிறுவாணி அணை.
சிறுவாணி அணை.
Updated on
1 min read

சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி, மேற்குத்தொடர்ச்சி மலையில் கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து 400 எம்.எம், 500 எம்.எம் விட்டம் கொண்ட பகிர்மானக் குழாய்கள் மூலம் வழித்தடத்தில் உள்ள 7 பேரூராட்சிப் பகுதிகள், 28 வழியோரக் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 1000 எம்.எம் விட்டம் கொண்ட மற்றொரு பகிர்மானக் குழாய் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், மாநகராட்சியின் பாரதி பார்க் பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு விநியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் சராசரியாக 100 எம்.எல்.டி குடிநீர் பெறப்படுகிறது. சிறுவாணி அணையில் முழுக் கொள்ளளவான 49.50 அடி உயரத்துக்கு முன்பு குடிநீர் தேக்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு, அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவைத் தொடர்ந்து 45 அடி உயரத்துக்கு வரை மட்டுமே, சிறுவாணி அணையில் குடிநீர் தேக்கப்படுகிறது.

நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தினமும் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 44.61 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 105 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக சிறுவாணி அணையில் சராசரியாக 44.61 அடி என்ற அளவுக்கு நீர் தேக்கப்படுகிறது. 45 அடியைத் தாண்டி நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், அடிக்கடி அணையில் இருந்து கேரளா நீர்பாசனத்துறை அதிகாரிகள் தண்ணீரைத் திறந்துவிட்டு வெளியேற்றினர். நடப்பு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 முறை இதேபோல், சிறுவாணி அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரளாவுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ''சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ''சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக 4 நாட்களுக்கு முன்னர் அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in