Published : 08 Sep 2015 08:41 PM
Last Updated : 08 Sep 2015 08:41 PM

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டுகளில் ரூ.3.68 கோடி நிதி உதவி: திமுக தலைமை கழகம் தகவல்

கருணாநிதி அறக்கட்டளை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, மருத்துவ உதவியாக ரூ.3 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து அளித்த ரூ.5 கோடி, வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை ஏழைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில் இருந்து ரூ.1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் – பதிப்பாளர் சங்கத்துக்கு கடந்த 2007-ல் கருணாநிதி வழங்கினார். மீதமுள்ள 4 கோடியில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் 2007 பிப்பரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கிடைத்த வட்டித் தொகையிலிருந்து தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 13 பேருக்கு கல்வி, மருத்துவ உதவியாக ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2005 நவம்பர் முதல் இதுவரை 10 ஆண்டுகளில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x