Published : 28 Sep 2020 06:35 PM
Last Updated : 28 Sep 2020 06:35 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலிருந்து இன்று முதல் விலகத் தொடங்கியுள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 7 செ.மீ., மானாமதுரை (சிவகங்கை), இலுப்பூர் புளிப்பாட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) தலா 6 செ.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்), சங்கரிதுர்க் (சேலம்), காரைக்கால், நாகப்பட்டினம், நெய்வேலி (கடலூர்) தலா 5 செ.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை ), கொடுமுடி (ஈரோடு), அரவக்குறிச்சி (கரூர்) தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை

கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x