Published : 28 Sep 2020 02:13 PM
Last Updated : 28 Sep 2020 02:13 PM

இருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

இருமொழிக் கொள்கையே எங்கள் பிரதான கொள்கை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக்கும், மாநிலங்களின் கல்வி உரிமையில் மத்திய அரசு நுழைய வழிவகுக்கும் நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தவிர, மத்திய அரசை வலியுறுத்தி மேலும் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இருமொழிக் கொள்கையே பிரதான கொள்கை:

தாய்மொழி -தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அதிமுகவின் மொழிக் கொள்கை.

எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல. எந்த மொழியும் எம் மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது என்ற கருத்தில் அதிமுக உறுதியாய் இருக்கும்.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த மனிதாபிமான சிந்தனையும், சகோதரத்துவ உணர்வும், உலகப் பார்வையும் கொண்ட பண்பாடு தமிழர் பண்பாடு. எல்லோரையும் உற்றார் உறவினராகப் போற்றி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, அறவழிப்பட்ட வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். அன்னைத் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று, அதன் இலக்கியச் சுவையையும், அதுகூறும் அற உணர்வுகளையும் கற்றறிதல் வேண்டும். உலகெங்கும் சென்று உறவாட ஆங்கிலம் என்னும் இணைப்பு மொழியையும் படித்திடல் வேண்டும் என்ற இருமொழிக் கொள்கை அண்ணா நமக்குக் காட்டிச் சென்ற லட்சிய வழியாகும்.

இருமொழிக் கொள்கை ஆய்ந்து, அறிந்து மேற்கொள்ளப்பட்ட அறிவுவழிக் கொள்கை. வெறுப்பால் உருவான கொள்கையல்ல. மாறாக, அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் உருவான கொள்கை என்பதை அண்ணா விளக்கியுள்ளார்.

ஒருமொழி பேசப்படாத சூழலில் வாழும் மாணவச் செல்வங்கள் அந்த மொழியைக் கற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக நாம் அறியலாம். அதிலும் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், தங்கள் வாழ்க்கைச் சூழலில், வழக்கத்தில் இல்லாத மொழியைப் புதிதாகப் படிப்பதென்பது அவர்களுடைய சுமையைப் பலமடங்கு அதிகரிக்கும்.

கூடுதலாக ஒரு மொழியை ஒருவர் தெரிந்துகொள்வதால், அவர் அந்தமொழி தெரியாதவரை விட அறிவில் சிறந்தவர் என்பதை யாரும் ஏற்க முடியாது. பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் இன்றைய தேவைகளுக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் இன்றியமையாத பாடத் திட்டங்களைப் பயில்கின்றனர். இந்தப் பாடத் திட்டங்களில் மாணாக்கர்கள் தங்கள் மனதைச் செலுத்தி, மனச் சுமை இன்றி கற்றலின் இனிமையை உணர்ந்து படித்தல் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பள்ளிக்கு வெளியே பேசி, பழக வாய்ப்பில்லாத ஒருமொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மாணாக்கர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். ஏற்கெனவே உலக இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயில வேண்டிய இன்றியமையாத கடமை மாணாக்கர்களுக்கு இருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் அறிவுசார் தொழில்களில் முதன்மை பெற்றிருப்பதற்கு அவர்கள் பெற்ற ஆங்கிலக் கல்வி அடிப்படையாகத் திகழ்வதை யாரும் மறுக்க முடியுமா?

எனவே, இருமொழிக் கொள்கை (தாய்மொழியாம் தமிழ் மொழியும், ஆங்கிலமும்) நடைமுறையில் இருப்பதுவே சாலச் சிறந்தது. இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு என்றைக்கும் உறுதியாக இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ் மக்கள், தங்கள் மீது ஒரு மாற்றுமொழி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அனைத்து மொழிகளையும் மதிக்கும் தமிழ்நாடு என்றென்றைக்கும் இருமொழிக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் என்பதை இச்செயற்குழு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

நீட் தேர்வைக் கைவிட வேண்டும்:

'நீட்' என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.

மாநிலங்களின் கல்வி உரிமையில் நீட் தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் பங்குபெற்றிருந்த திமுக இப்பொழுது உண்மைகளை மறைத்துவிட்டு நீட் தேர்வுகளைக் காட்டி அரசியல் சுயலாபங்களுக்காக கபட நாடகம் ஆடுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டில் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோதுதான் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

மாநிலங்களின் சுயாட்சியைக் காப்பாற்றுவதிலும், மாணவச் செல்வங்கள் தரமான கல்வி பெறும் உரிமையை நிலைநாட்டுவதிலும் தன்னிகரில்லாத தலைவியாய் செயல்பட்ட ஜெயலலிதா, காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் நடைபெற்றபோது, 2012-ல் அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வை அன்றைக்கே மிகக் கடுமையாக எதிர்த்தார்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு 2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியபோது, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, மாநிலங்களின் கல்வித் திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முன்வைத்திருக்கும் கல்வித் திட்டத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பதால் பெரும்பாலான இந்திய மாணாக்கர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள இயலாது என்பதை ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களோடு சேர்ந்து, வலிமையான வாதங்களை வைத்ததின் அடிப்படையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு நடத்திய நீட் தேர்வு முற்றிலும் சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்தின் அம்சங்களுக்கு எதிரானது என்று 18.7.2013-ல் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்தது.

இத்தீர்ப்பின் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, அவர்களது கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு, தான் அளித்த நீட் தேர்வு சட்ட விரோதமானது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, இதுகுறித்த தனது அடுத்த உத்தரவு வரும்வரை நீட் தேர்வை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் 11.04.2016-ல் அனுமதி அளித்தது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த அனுமதியை அளித்தபோதிலும் அது முடிவான இறுதித் தீர்ப்பல்ல என்பதையும், புதிதாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளால் பெரும் அச்சத்தில் உறைந்திருந்த திமுக அரசு 1972-ல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது அதைத் தடுக்க மத்திய அரசைத் தட்டிக்கேட்க முடியாமல் தலைகுனிந்திருந்ததைப் போல, 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் பழி சுமந்திருந்த திமுக 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நீட் தேர்வு என்னும் ஏழை, எளிய மாணாக்கர்களின் எதிரி தலைதூக்கியபோது, மத்திய அரசிடம் வாய்மூடி மௌனியாக இருந்து, மாநிலங்களின் உரிமைகளைத் தனது சொந்த நலன்களுக்காகப் பலியிட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

நீட் தேர்வு முறைக்கான பாடத்திட்டம் மாநிலங்களின் தனித்துவமான கல்வித் திட்டங்களுக்கு முரணாக இருப்பதாலும், நீட் தேர்வு மாநில அரசுகள் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி உரிமைக்கு அரசியல் சட்டம் அளித்திருக்கும் பாதுகாப்பையும், அங்கீகாரத்தையும் மீறுவதாலும், கிராமப்புற ஏழை, எளிய முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பை தட்டிப் பறிப்பதாலும், நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் மருத்துவக் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும் அபாயம் நிலவுவதாலும், பன்முகத் தன்மையும், தனித்துவமும் கொண்ட பரந்து விரிந்த பெரிய நாடான நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவது இயற்கை நீதிக்கும், யதார்த்த நிலைகளுக்கும் எதிரானது என்பதாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற வாதத்தை மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு முன்வைத்து வந்திருக்கிறது.

நீட் தேர்வு குறித்து விசாரிக்கும் அமர்வு, புதிய நீதிபதிகள் நியமனத்தோடு விரைந்து விசாரணையை மேற்கொண்டு, 2016-ல் வாக்களித்தவாறு, வாதங்களின் நியாயங்கள் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, இந்திய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கி, அதன் வழியாக நீட் தேர்வைத் தொடர்ந்து நடத்த இருப்பதாக சூழல் மாறியிருப்பினும், இதனையும் சட்டரீதியாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு அரசின் வாதங்களின் வலிமையைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு நீட் தேர்வு முறையைக் கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

எல்லா நேரத்திலும் தங்கள் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திமுகவும், அதன் கோர நிழல்படிந்த வேறுசில கட்சிகளும் நீட் தேர்வு குறித்த உண்மைகளை மறைத்துவிட்டு மக்களிடம் கபட நாடகம் ஆடிவருவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதிமுக செயற்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x