Published : 28 Sep 2020 08:26 AM
Last Updated : 28 Sep 2020 08:26 AM

சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் ஸ்பெயின் - இந்தியா கூட்டு நிறுவனத்திடம் குப்பையை அகற்றும் பணி ஒப்படைப்பு: தீவுத்திடலில் 30-ம் தேதி முதல்வர் தொடங்கிவைக்கிறார்

சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம், அடையார், பெருங்குடி உள்ளிட்ட 7 மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணி ஸ்பெயின்- இந்தியாகூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி இதை தொடங்கிவைக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் கோடம்பாக்கம், அடையார், தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணி ஏற்கெனவே தனியாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த தனியார் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக கடைபிடிக்கவில்லை, மாநகராட்சி சார்பில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கும் தின ஊதியத்தை விட குறைவாக ஊதியம் வழங்கியது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்தன.

இதனிடையே சென்னையில் 12 மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. அவ்வாறு செய்தால், இப்போதுள்ள தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். சரியான ஊதியம் கிடைக்காது, பணிப் பாதுகாப்பு இருக்காது. எனவே தனியாரிடம் வழங்கக் கூடாது என மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணி, ‘அர்பேசர் சுமீத்’ என்ற ஸ்பெயின்-இந்தியா கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.447 கோடி வீதம் 8 ஆண்டுகளுக்கு மாநகராட்சி வழங்கும். அந்நிறுவனத்தின் பணியை மாநகராட்சி நிர்வாகம் 34 வகையான பார்வையில் கண்காணித்து, மதிப்பீடு செய்து நிதியை வழங்கும்.

இந்நிறுவனம் மேற்கூறிய 7 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணிகளை அக்டோபர் 1-ம் தேதிமுதல் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா தீவுத் திடலில் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x