Published : 27 Sep 2020 10:38 AM
Last Updated : 27 Sep 2020 10:38 AM

திருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட கிடைக்காமல் செடியிலேயே வீணாகிறது

திருப்பரங்குன்றம் அருகே வலைய பட்டியில் மஞ்சள் செவ்வந்திப் பூக்கள் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பறிப்புக் கூலிக்கான வருவாய்கூட கிடைக்காமல் செடியிலேயே வாடி வீணாகிறது.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள வலையபட்டி, வலையங்குளம் மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் பல நூறு ஏக்கரில் பூ விவசாயம் நடக்கிறது. கரோனா காலத்தில் பூக்கள் விலை மிகக் குறைவாக இருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது ஓரளவு விலை கிடைப்பதால் பூக்களை மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகின்றனர். வியாபாரிகள் நேரடியாகவும் கொள்முதல் செய்கின்றனர்.

வலையபட்டியில் மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அதிகம் பூத்துள்ளது. எனினும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஓரிரு நாட்களாக ஒரு கிலோ மஞ்சள் செவ்வந்தி கிலோ ரூ.15-வரை மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பறிப்புக் கூலி, வண்டி வாடகை, போக்குவரத்துச் செலவு மட்டுமே கிலோவுக்கு ரூ.30 வரை ஆகிறது. இதனால் பலரும் பூக்களை பறிக்காமலேயே விட்டுவிட்டனர். கிலோ ரூ.60-வரை விற்றால் மட்டுமே அசலாவது கிடைக்கும். பூக்களின் தேவை குறைந்ததால் விலை போகவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்டம். இந்நிலை மாற வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x