Published : 27 Sep 2020 10:36 AM
Last Updated : 27 Sep 2020 10:36 AM

மதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை 6-லிருந்து 15 ஆக உயர்வு

மதுரை மாவட்ட திமுகவில் முதன்முறையாக ஒன்றியங்களைப் பிரிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதையடுத்து, வடக்கு மாவட்ட திமுகவில் ஒன்றியச் செயலாளர்களின் எண்ணிக் கையை 6-ல் இருந்து 15 ஆக உயர்த்தி, கட்சித் தலைமையின் ஒப்புதலுக்குப் பட்டியல் அனுப்பப் பட்டுள்ளது.

மதுரை வருவாய் மாவட்டத்தில் திமுக நிர்வாக ரீதியாக மதுரை மாநகர், புறநகரில் வடக்கு, தெற்கு என 3 மாவட்டங்களாகச் செயல்படுகிறது. புறநகரில் மொத்தம் 13 ஒன்றியங்கள் உள்ளன.

மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய 6 ஒன்றியங்கள் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுகவிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஆகிய 7 ஒன்றியங்கள் புறநகர் தெற்கு மாவட்ட திமுகவிலும் இடம் பெற்றுள்ளன.

திமுகவில் கிராமங்கள்தோறும் கிளைச் செயலாளர்கள், ஒன்றியங் கள், நகராட்சிகள், பேரூராட்சி களுக்குத் தனித்தனியாக செயலாளர்கள், மாநகராட்சிகளில் வார்டுக்கு ஒரு செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளை சமாளிக்கவும், செயல்பாட்டை மேம்படுத்தவும் தற்போது கட்சி தலைமையே பல மாவட்டங்களைப் பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது.

தற்போது மதுரை புறநகரில் முதல்முறையாக கட்சியின் ஒன்றியங்களைப் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்கள் 15 ஆக பிரிக்கப்படுகிறது. 3 ஒன்றி யங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 6 ஆகவும், மதுரை கிழக்கு உள்ளிட்ட மேலும் 3 ஒன்றியங்கள் தலா 3 ஆக பிரிக்கப்பட்டு மொத்தம் 15 ஒன்றியங்களாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 9 ஒன்றியச் செயலாளர்கள் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஒன்றியத்துக் கும் புதிதாக 9 பேர் கொண்ட பொறுப்புக்குழுவும் அமைக்கப் பட்டுள்ளது.

இதனால் வடக்கு மாவட்டத்தில் புதிதாக 135 பொறுப்புக்குழு உறுப்பினர்கள், 9 ஒன்றியச் செயலாளர்கள் பதவியைப் பெறவுள்ளனர்.

மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி ஒன்றியங்கள் வாரியாக நிர்வாகிகளிடம் கலந்தாய்வு நடத்தி இந்த நியமனங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

திமுக உருவானது முதல் மதுரை மாவட்டத்தில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டதில்லை. தற்போது தான் முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் பட்டியல் கட்சித் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகும். புதிதாக ஏராளமானோருக்கு பதவிகள் கிடைப்பதால், கட்சிப் பணிகள் மேலும் சிறப்பாக நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், மதுரை தெற்கு மாவட்டத்தில் உள்ள 7 ஒன் றியங்கள் 14 முதல் 17 ஆக பிரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x