Published : 26 Sep 2020 08:12 PM
Last Updated : 26 Sep 2020 08:12 PM

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மதுரையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அம்மா பேரவையின் சார்பில் கரோனா தொற்று நோய் உள்ளவர்களுக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுக் கூடத்தை இன்று கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன் ஆகியோர் சென்றனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிற்கே வழிகாட்டியாக மதுரையில் கழக கழக அம்மா பேரவையின் சார்பில் கரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கும் அம்மா கிச்சன் செயல்பட்டு வருகிறது.

கரோனோ பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் மீண்டு வரும் வகையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தேவையான உணவுகளை தடையின்றி வழங்கி வருவதால் முதல்வரே பாராட்டியுள்ளார்.

அம்மா கிச்சன் மூலம் முறையாக சத்தான உணவு நோயாளிகளுக்கு வழங்குவதாலே மதுரையில் கரோனோ கட்டுக்குள் வந்துள்ளது. அடித்தட்டு மக்களுக்கு ஜெயலலிதா உருவாக்கிய அம்மா உணவகம் புகழ் பெற்றது போல் இந்த அம்மா கிச்சன் கடந்த 85 நாட்ளுக்கு மேல் நோயாளிகளுக்கு உணவே மருந்தாக வழங்கி புகழ் சேர்த்து வருகிறது.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி 21,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்கு திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்னர் மருத்துவக் குழு அறிவுரையின் பேரில் உரிய நேரத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x