Published : 26 Sep 2020 07:32 PM
Last Updated : 26 Sep 2020 07:32 PM

முக்கடல் சங்கமத்தில் படகு சேவை மீண்டும் தொடங்குமா?- வருமானம் இன்றித் தவிக்கும் வியாபாரிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையைக் கண்டு மகிழும் வகையில் படகு சேவையை மீண்டும் தொடங்காததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் வருவாய் இன்றி வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.

கரோனா வைரஸின் தாக்கம் சுற்றுலாத் துறை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. கன்னியாகுமரியைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில்தான் கடந்த மார்ச் மாதத்தில் கரோனாவினால் ஊரடங்கு ஏற்பட, சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரியும் வெறிச்சோடியது.

இங்குள்ள கடைகள், உணவகங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசு, அண்மையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதில் கன்னியாகுமரி உள்ளிட்ட குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கன்னியாகுமரி கடற்கரையை நம்பி வியாபாரம் செய்து பிழைக்கும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், அவர்களிடம் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களும் நிம்மதி அடைந்தனர். ஆனால், கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டாலும் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது கன்னியாகுமரி. இதனால் அரசு கடைகளைத் திறக்க அனுமதித்தும் வருவாய் இன்றித் தவித்து வருகின்றனர் வியாபாரிகள்.

இதுகுறித்துக் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''கன்னியாகுமரியைப் பொறுத்தவரை பகவதி அம்மன் கோயில், சூரிய உதயம், அஸ்தமனம், முக்கடல் சங்கமம், காந்தி, காமராஜர் மண்டபங்கள் என ஏராளமான இடங்கள் பார்ப்பதற்கு இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பகுதி விவேகானந்தர் பாறைதான். கண்முன்னே விரியும் சமுத்திரத்தில் படகில் ஏறி சிறிது தூரம் பயணித்து, ஆன்மிக பூமியான விவேகானந்தர் பாறையில் இருந்து திரும்புவதை விரும்பாதவர்களே இல்லை. குமரிக்குச் சுற்றுலா வருபவர்களில் பெரும் பகுதியினர் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையைப் படகில் போய்ப் பார்க்கலாம் என விரும்பி வருபவர்கள்தான்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கன்னியாகுமரியில் இயல்புநிலை திரும்பிவிட்டது. ஆனால், பூம்புகார் கப்பல் கழகத்தின் சார்பில் இன்னும் படகுப் போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடிக் கிடக்கிறது. குகன், பொதிகை, விவேகானந்தர், தாமிரபரணி என நான்கு படகுகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது இன்று முதல் கூடுதலாக திருவள்ளுவர் என்னும் படகும் வந்துள்ளது. ஐந்து படகுகள் இருக்கும் நிலையில் இதுவரை படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

படகு சேவை மீண்டும் தொடங்கினால் மட்டுமே கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை கூடும். அப்படிக் கூடும்போதுதான் அதைச் சார்ந்து இருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும். இதுகுறித்துத் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்'' என்றார் செல்வகுமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x