Published : 26 Sep 2020 06:30 PM
Last Updated : 26 Sep 2020 06:30 PM

கரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம் கோடி தமிழக அரசு திட்டங்கள்

ஜப்பான் நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கரோனாவைக் காரணம் காட்டி கடன் வழங்குவதைத் தாமதம் செய்வதால் அதை நம்பி நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி மருத்துவத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தற்போது அரசு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வட்டிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் பெறுவது வாடிக்கையாகிவிட்டது.

ரூ.1,295 கோடியில் நடக்கும் மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.190 கோடி கடன் வழங்குகிறது. அதுபோல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,264 கோடி கடன் வழங்குகிறது.

அதுமட்டுமில்லாது, இதே நிறுவனம் தமிழக அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டிற்காக ரூ.1387.87 கோடி கடன் வழங்குகிறது. இந்நிறுவனம் நிதி ஒதுக்கினால் மட்டுமே இந்தப் பெரிய திட்டங்கள் தொடங்கும்.

ஆனால், கரோனாவால் உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால், கடன் வழங்குதாகக் கூறிய இந்த நிறுவனங்கள், தற்போது உறுதி கூறியபடி கடன்களை வழங்காமல் இருப்பதால் இந்தத் திட்டங்களைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார உரிமைச் செயற்பாட்டாளர் ஆனந்த ராஜ் கூறுகையில், ‘‘தமிழக அரசு மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவக் கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடனுதவியுடன் தமிழக அரசுடன் இணைந்து ரூ.1,634 கோடி பட்ஜெட்டுடன் செயல்படுத்த இத்திட்டம் 2016-ல் ஆரம்பிக்கப்பட்டது.

2022 ஆண்டுக்குள் முடிக்கவேண்டும் என்று முக்கிய விதிமுறைகளில் ஒன்று. இத்திட்டத்தின்படி ஜப்பான் நிறுவனம் ரூ.1387.87 (சதவீதம்) நிதி பங்களிப்புடன் மீதம் ரூ.255.82 (15 சதவீதம்) மாநில அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்துவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

இத்திட்டத்தின்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 10 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 4 தாலுக்கா மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டன.

ஜப்பான் நிறுவன நிதி உதவியுடன் முதற்கட்டமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் (2019 டிசம்பர் மாதம் கடைசி நிலவரப்படி) ரூ.4,48 கோடிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு செலவு செய்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

மீதி நிதி இன்னும் ஒதுக்கப்படாமலும், இந்தத் திட்டம் முழுமையாகத் தயாரிக்கப்படாமலும் உள்ளன. கரோனா எதிரொலியாக தற்போது இத்திட்டம் செயல்படுத்துவதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறினாலும், ஏற்கெனவே இதே ஜப்பான் நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x