Published : 26 Sep 2020 05:26 PM
Last Updated : 26 Sep 2020 05:26 PM

தாயை ஏமாற்றி வீட்டு மனையை மோசடியாக எழுதி வாங்கிய மகன்: நடவடிக்கை கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாசத்தைப் பயன்படுத்தி வீட்டு மனையை மோசடியாக எழுதி வாங்கிவிட்டு, பராமரிக்கத் தவறிய மகனுக்கு எதிராகத் தாய் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும், அதன்மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஒரிக்கையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். மகள்கள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முதல் இரு மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்துவிட்ட நிலையில், 40 வயதைக் கடந்த மூன்றாவது மகன், திருமணமாகாத நிலையில், சிறு வியாபாரம் மூலம் சொற்ப வருமானம் ஈட்டி வருவதுடன், தாய் ராஜலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இரண்டாம் மகன் ஏழ்மையில் இருக்கும் நிலையில், மூத்த மகன் கிருபாசேகரன் திருமணமானது முதல் வசதியுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், தாய் ராஜலட்சுமியைப் பற்றியோ, சகோதர-சகோதரிகளின் நிலை குறித்தோ அவர் கவலைப்படுவதில்லை என்றும், 20 வருடமாக எந்த நிதி உதவியும் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூத்த மகன் கிருபாசேகரன் தனது மனைவியுடன் சேர்ந்து தனது தாயாரிடம் நைச்சியமாகப் பேசி அருகில் உள்ள 4 ஆயிரத்து 304 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டு மனையை மோசடியாக தனது பெயருக்கு செட்டில்மென்ட் எழுதி வாங்கியுள்ளார்.

கடன்காரர்களின் தொல்லை, இடத்தை அடமானம் வைப்பதற்காக என மகன் கூறியதை நம்பி வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார் ராஜலட்சுமி. பின்னர்தான் மூத்த மகன் மோசடி செய்து செட்டில்மென்ட் எழுதி வாங்கியது ராஜலட்சுமிக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, சார் பதிவாளரிடம் ராஜலட்சுமி புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் தன்னை முறையாகப் பராமரிக்க மகன் கிருபாசேகரனுக்கு உத்தரவிட வேண்டும், மோசடியாக செய்த செட்டில்மென்ட் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், அவர் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை எதிர்மனுதாரராகச் சேர்த்ததுடன், ராஜலட்சுமியின் புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையைப் பெற்று பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x