குலசேகரன்பட்டினம் தசரா விழா ஏற்பாடுகள்: தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை- கரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் விரதத்தை உள்ளூர் கோயில்களிலேயே முடிக்க வேண்டுகோள்

குலசேகரன்பட்டினம் தசரா விழா ஏற்பாடுகள்: தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை- கரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் விரதத்தை உள்ளூர் கோயில்களிலேயே முடிக்க வேண்டுகோள்
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரத்துக்கு அடுத்தபடியாக நடைபெறும் பெரிய திருவிழா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆகும்.

இந்த ஆண்டு தசரா திருவிழா 17.10.2020 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் 17.10.2020 அன்று திருவிழா கொடியேற்றத்தின் போது பக்தர்கள் கலந்துகொள்ள இயலாது.

மேலும் 1, 10, 11 ஆகிய மூன்று நாள் திருவிழாக்கள் தவிர மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்ய இயலும் என்பதற்கேற்ப, திருச்செந்தூர் கோயிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பக்தர்கள் வருவதைப் போல இங்கும் அனுமதிக்கலாம்.

சுவாமி புறப்பாடு வெளியில் செய்யாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறவும், உற்சவ மூர்த்தி வீதி உலா கோயில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறவும், இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருவிழா நிகழ்வுகளை யூ டியூப் மற்றும் லோக்கல் சோனல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம். இந்த ஆண்டு திருக்கோயில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது.

கரோனா தொற்றை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளுர் கோயில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிசேக பொருட்களை பெற்று சுவாமி அபிசேகம் செய்யப்படும். ஆனால், அபிசேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை.

தீயணைப்பு துறையினர் மூலம் தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கோயில் நிர்வாகத்தின் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 30-ம் தேதிக்கு பின் தமிழக அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து செய்திகள் நாளிதழ்கள் மூலம் தெரிவிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in