Last Updated : 26 Sep, 2020 11:57 AM

 

Published : 26 Sep 2020 11:57 AM
Last Updated : 26 Sep 2020 11:57 AM

ராமநாதபுரத்தில் 100 ஏக்கர் பரப்பில் கடல் உணவு பூங்கா: 4000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ராமநாதபுரத்தில் ரூ.150 கோடி செலவில் 100 ஏக்கர் பரப்பில் கடல் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே மிக நீண்ட (271 கி.மீ.தூரம்) கடற்கரையைக் கொண்டது. இங்கு விவசாயத்துக்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடுகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. ஆனால் மீன்களை பதப்படுத்தும், சுத்தப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இங்கு இல்லை. இங்கிருந்து தூத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் சுத்தப்படுத் தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது போல் கடல் உணவு நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இல்லை.

ஜெயலலிதா அறிவிப்பு

மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ராமநாதபுரம் மாவட்டத்திலேயே கடல் உணவு தொழிற்சாலைகளை ஏற்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி எடுத்தார். அதன்படி தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ஒருங்கிணைந்த கடல் உணவு பூங்கா அமைக்கப்படும் என 2016-ல் ஜெயலலிதா அறிவித்தார். அதனையடுத்து ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் 100 ஏக்கரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த ஓராண்டாக அங்கு சாலை அமைத்தல், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துதல், வங்கிக்கிளை, சிற்றுண்டி வசதிகளுக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல்வர் அறிவிப்பு

கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி, ரூ.150 கோடி மதிப்பில் சக்கரக் கோட்டையில் அமைக்கப்படும் கடல் உணவு பூங்காவில் பல்வேறு கடல் உணவு தொழிற்சாலைகள் அமையும். இதன் மூலம் 4,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

சிட்கோ அதிகாரி ஒருவர் கூறும்போது, இக்கடல் உணவு பூங்காவில் தொழில் முனை வோருக்கு இடம் வழங்கப்படும். அவரவர் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளலாம். இங்கு மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோர், மீன் எண்ணெய், மீன் உணவு, நண்டு, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட கடல் உணவு சார்ந்த எந்த தொழில்களும் தொடங்கலாம். தொழில் தொடங்க தேவையான இடத்தை அரசிடம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் வெற்றிவேல் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிடிக்கப்படும் இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இங்கு கடல் உணவுகளை பதப்படுத்தும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இல்லை. தற்போது ராமநாதபுரத்திலேயே கடல் உணவு பூங்கா அமைவதால் ஏராளமான ஏற்றுமதி நிறுவனங்கள், கடல் உணவு உற்பத்தி நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிட்கோ நிறுவனம் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து கடல் உணவு தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x