Published : 26 Sep 2020 11:47 AM
Last Updated : 26 Sep 2020 11:47 AM

எந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை: எஸ்பிபி

தான் பாடிய பாடல்கள் தனக்கு மட்டுமே சொந்தமல்ல என, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியில் எஸ்பிபி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று (செப். 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடல், இன்று (செப். 26) அவருடைய சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்பிபி, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

அப்போது ஒரு பாடல் உருவாகும் விதம் குறித்துப் பேசிய எஸ்பிபி, "எந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை. ஒரு பாடலுக்குச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஒலிப்பதிவு செய்பவர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என எல்லோருமே சொந்தக்காரர்கள்தான்.

எனக்கு ஒரு கேடயம் கொடுத்தால்கூட, அதற்கு 35 சதவீதம்தான் என்னுடைய பங்கு. மற்ற 65 சதவீதம் மற்றவர்களுக்குச் சேர வேண்டும். அவர்களின் சார்பாக கேடயத்தை வாங்கிக்கொள்கிறேன் என்றுதான் சொல்வேன். நல்ல பாடல்கள் கொடுத்த எல்லோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x