Published : 26 Sep 2020 11:28 AM
Last Updated : 26 Sep 2020 11:28 AM

ரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது: கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி பேச்சு

எஸ்பிபி: கோப்புப்படம்

சென்னை

ரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது என, கங்கை அமரனுடனான கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று (செப். 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடல், இன்று (செப். 26) அவருடைய சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தன் ரசிகர்களின் ஆரோக்கியம் குறித்து, இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனுடன் கரோனா காலத்தில் இணையவழிக் காணொலி வாயிலாக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியுள்ளார். டோக்கியோ தமிழ்ச் சங்கம் நடத்திய அந்தப் பாராட்டு விழாவில் பேசிய எஸ்பிபி, கங்கை அமரனுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், "இசை ரசிகர்கள் நீடூழி வாழ வேண்டும், ஆரோக்கியமாக வாழ வேண்டும். ரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது. அவர்கள் போட்ட பிச்சையால்தான் நாம் இங்கு இருக்கிறோம்" என எஸ்பிபி அந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x