Last Updated : 26 Sep, 2020 11:13 AM

 

Published : 26 Sep 2020 11:13 AM
Last Updated : 26 Sep 2020 11:13 AM

மானியமும் இல்லை; ஊக்கத்தொகையும் இல்லை: பயிர்க் காப்பீட்டை அமல்படுத்த கிரண்பேடியைக் கோரும் புதுச்சேரி விவசாயிகள்

புதுச்சேரியில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியமும், ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை. எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் மனுக்கள் அனுப்பி வருகின்றனர்.

புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூரில் கடந்த ஜூலையில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது நன்றாக விளைந்துள்ளன. அறுவடையும் நடைபெற்று வருகிறது. தற்போது மழைப்பொழிவும் இருப்பதால் நெல் மணியில் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இதனால், ரூ.1,200-க்கு விற்பனையாகும் ஒரு மூட்டை நெல், (கிலோ-ரூ.75), ரூ.800 முதல் ரூ.900 வரை மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. உரிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

ஒரு பக்கம் அறுவடைப் பணிகளும், மறுபக்கம் சம்பா சாகுபடிக்கான உழவுப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. சம்பா பருவப் பயிர் தை மாதம் அறுவடை செய்யப்படும்.

புதுச்சேரியில் நடவு பணிக்குத் தயாராகும் விவசாயிகள்

புதுச்சேரி கிராமப் பகுதிகளான பாகூர், கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம், மடுகரை, கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கம், சேலியமேடு, பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் நெல் அறுவடையும், நடவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி விவசாயிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நெல் பயிரிடும் தங்களுக்கு மானியமும், ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை. எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்று மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

பங்காரு வாய்க்கால் நீர் ஆதாரக் கூட்டமைப்புத் தலைவர் சந்திரசேகர் தான் அனுப்பிய மனு தொடர்பாக கூறுகையில், "புதுச்சேரி அரசு உழவர் உதவியகம் மூலம் மானியத்தில் தர வேண்டிய விதைகள், பூச்சி மருந்துகள், இடுபொருட்கள், உரங்களைத் தரவில்லை. வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அவற்றைத் தர உத்தரவிட வேண்டும்.

சந்திரசேகர்

கரோனா காலத்தில் கடும் பாதிப்பில் உள்ளோம். விவசாயிகளுக்குத் தர வேண்டிய ஊக்கத்தொகை, இழப்பீடு தரப்படவில்லை. நன்றாக விளைந்த நெல்லுக்குப் போதிய விலை இல்லை. தற்போது ரூ.800-க்குதான் விலை போகிறது. மார்க்கெட் கமிட்டி தற்போது செயல்படவில்லை. 6 மாதங்களாக இத்துறை சார்ந்தோருக்கு ஊதியம் தந்து விடுகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு ஏதும் செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து இதுவரை எவ்வித மானியமும், ஊக்கத்தொகையும் தரப்படவில்லை.

எனவே, பயிர்களுக்கான ஊக்கத்தொகை, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, விவசாயச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருக்கிறோம். தன்னைப் போலவே விவசாய அமைப்பினர் பலரும் துணைநிலை ஆளுநருக்கு மனு அனுப்பி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x