பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 28 பேர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவு

பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தில் நேற்று முகாமிட்டிருந்த அதிகாரிகள், ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாணிக்கத்திடம் விசாரிக்கின்றனர்.
பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தில் நேற்று முகாமிட்டிருந்த அதிகாரிகள், ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாணிக்கத்திடம் விசாரிக்கின்றனர்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த28 பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு மற்றும் கழனிவாசலில் கடந்த 22-ம் தேதி கரோனாதொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சொர்ணக்காட்டில் 12 பேருக்கும், கழனிவாசலில் 28 பேருக்கும், பேராவூரணி அருகே உள்ள வீரராகவபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எங்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை. எனவே, சிகிச்சைக்கு வர முடியாது என்று ஆம்புலன்ஸுடன் வந்த மருத்துவ குழுவினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீண்டும் கரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதியானால் மட்டுமே சிகிச்சைக்கு வரமுடியும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரத்தில், அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டதை அறிந்த கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 28 பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in