

மாமல்லபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் மண் நிரப்பும் பணிகளுக்கு, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் குறுகலான இடத்தில் இருந்த பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைக்க, கடந்த 1992-ம் ஆண்டு புதுநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. இதற்காக கிழக்கு கடற்கரை சாலையையொட்டி கருகாத்தம்மன் கோயில் எதிரே 6.79 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் தேர்வு செய்யப்பட்டது. நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு பணிகளால் இத்திட்டம் தாமதமாகியது.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகஅரசு மாமல்லபுரத்தில் புதியபேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்ததையடுத்த. புதுநகர் வளர்ச்சி குழுமம், மத்தியபொதுப்பணித் துறை மூலம் வரைபடம் தயாரித்து அரசின் ஒப்புதலைபெற்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்ல 4 பாதைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், 50 பேருந்துகள்நிறுத்தி இயக்கும் வகையில், ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பேருந்து நிலையம் அமையுவுள்ள நிலப்பகுதி பள்ளமாக உள்ளதால் மண்கொட்டி உயர்த்த வேண்டிஉள்ளது. எனவே மண் நிரப்பும் பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே உள்ளன. அதனால், நிலத்தை பார்வையிட்டு தேவையான மண் எடுத்து நிரப்ப மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகள் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று,உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.