Published : 26 Sep 2020 07:32 AM
Last Updated : 26 Sep 2020 07:32 AM

காவிரி நீர் மேலாண்மை ஆணைய 9-வது கூட்டம்: தமிழகத்தின் எதிர்ப்பால் மேகேதாட்டு அணை குறித்த விவாதம் நிறுத்திவைப்பு

காவிரி நீர் மோலாண்மை ஆணையகூட்டத்தில் தமிழகத்தின் எதிர்ப்பால், கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக விவாதம் நடைபெறவில்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 9-வது கூட்டம், காணொலிகாட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. டெல்லியில் ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் பங்கேற்றார். தமிழகம் சார்பில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறைச் செயலர் கே.மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கர்நாடக நீர்வளத் துறைச் செயலர் ராகேஷ் சிங், கேரள நீர்ப்பாசனத் துறைத் தலைமைப் பொறியாளர், புதுச்சேரி தலைமைப் பொறியாளர் மற்றும் மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுவான நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகம் இதுவரை வழங்கிய நீரின் அளவு, இன்னும் வழங்காமல் நிலுவையில் உள்ள நீரின் அளவை குறிப்பிட்ட தமிழக பொதுப்பணித் துறைச் செயலர் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இந்த மாதத்துக்கான 10 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வரும் அக்டோபர் மாதத்துக்கான 25 டிஎம்சி நீரையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது குழுவில் உறுப்பினர்களாக உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கர்நாடகாவில் இன்னும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று, நீரை வழங்க கர்நாடக அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக அதிகாரிகள் மேகேதாட்டுவில் கட்ட முயற்சித்துவரும் அணை மற்றும் நீர்மின் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேகேதாட்டு விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x