Published : 26 Sep 2020 07:09 AM
Last Updated : 26 Sep 2020 07:09 AM

வானகரம் - வாலாஜா இடையே 6 வழிச்சாலை விரிவாக்க பணி 5 ஆண்டுகளுக்கும் மேல் தாமதம்: வாகன நெரிசல் ஏற்படுவதாக புகார்

வானகரம் - வாலாஜா இடையே6 வழிச்சாலை விரிவாக்க திட்டப் பணிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, சாலை விபத்துகளும் நடக்கின்றன என்று வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிரதான சாலையாக சென்னை - பெங்களூரு தேசியநெடுஞ்சாலை இருக்கிறது. இருபெரும் நகரங்களை இணைப்பதோடு, நகரங்கள் நடுவே, ஒசூர், வாலாஜா, வானகரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த சாலையில் பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடக்கிறது. எனவே, இந்த சாலையை 6 வழிகளாக மாற்றும் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. தற்போது, பெங்களூரு - வாலாஜா வரையிலான சாலை 6 வழிகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், வாலாஜா - வானகரம் இடையேயான 96 கிமீ சாலைகள் மட்டும் இன்னும் 6 வழிச்சாலைகளாக மாற்றப்படாமல் இருக்கின்றன. இந்த திட்டம் தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கின. ஆனால், இதுவரை பணிகள் வேகமாக நடைபெறவில்லை. மேலும், இந்தசாலைகளில் போதிய அளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மோசமாக இருகிறது. இதனால்,சாலை விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் தேவையான இடங்களில் விரிவாக்கம் செய்ய ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சில இடங்களில் சாலைபராமரிப்பு மற்றும் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் வாகனரம் - வாலாஜா இடையேயான 6 வழிச்சாலை விரிவாக்கத்துக்கு ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி5 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளன. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. ஆனால், சாலை விரிவாக்கப் பணியை காரணம் காட்டிவாகனரம், வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் மட்டும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. எனவே, நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x